Monday, June 14, 2010

குட்டிக் கவிதைகள்

என் முத்தம் மட்டும்
முடிகையில்தான்
இதழ்கள் இணைகின்றன...

--

வானம், கையெட்டும் தூரம்தான்.
என் ஜன்னல்
கம்பிகள்தான் தடுக்கின்றன..

--

ஓடி விளையாடு பாப்பா-
என்று மாலை முழுதும்
மனப்பாடம் செய்தான்.

--

புத்தத்தில் கூட
ஆசைக்கு இடம் உண்டு.
ஆசைகள் துறக்க.

--

பி. கு. வழக்கம் போல் எப்பொழுதோ எங்கெங்கோ தோன்ற தோன்ற கிறுக்கிவைத்திருந்த கவிதைகள். என் பொன் குஞ்சுகள்.

Sunday, June 13, 2010

அகம் பிரம்மம்.
சர்வம் சிவம்.
சுகம் மாயம்.
ஜீவிதம் கர்மம்.

Tuesday, June 01, 2010

தமிழ் வலை..

வலைக் குறிப்பு, வலையோலை, வலைப்பதிவு, வலைப்பூ என்று ஆதி சிவன்போல் ஆயிரம் நாமத்தால் அழைக்கபடுகின்ற பிளாக்கினைப் பற்றி எழுத வேண்டும் என்று கடந்த சில வாரங்களாக நான் கொண்ட அனுபவங்கள் தூண்டுகின்றன...

வலை நண்பர் கவிதா அவர்கள் அன்புத்தொல்லை தந்து தமிழ் மனம் போன்ற வலை பின்னல்களிலும் எனை இணையசெய்தார்... அங்க இருந்து தாங்க 'வலைப்பூவின் முட்பக்கம்! ' என்று எழுதும் அளவிற்கு தகவல்கள் .

சுஜாதா கேள்வி - பதில்களில் ஒருவர்

"பிளாக்குகள் பற்றி உங்கள் எண்ணம் என்ன ?" என்று கேட்க ,

" 'சாட்'களை விடவும் பொறுப்பில்லாதவை பிளாக்குகள்..."

என்பது போன்று ஒரு பதில் அளித்திருந்தார் சுஜாதா ... அதைப் படித்த பொது, சுஜாதாவிற்கும் வயசாயிடுச்சா? என்ற அளவிற்கு நான் யோசித்தேன்... ஏதாவது ஒன்றிரண்டு வலைப் பதிவுகளை படித்துவிட்டு சொல்லிருக்கார் என்று ஒரு நிமிடம் அவரை தவறாகவும் நினைத்துவிட்டேன்...

தமிழ் மனம் மற்றும் சில திரட்டிகளில் இனைந்து பிற தமிழ் 'அறிஞர்', 'எழுத்தாளர்கள்', 'மேதைகளின்' , வலைப் பூக்களை பார்த்த பின்புதான் ஒன்றிரண்டைப் பார்த்துவிட்டு ஊகித்தது சுஜாதா இல்லை என்பது உரைத்தது...

எனக்குத் தெரிந்த இனியா, யாத்ரா , போன்றோரின் வலைப்பூக்கள் நிஜப்பூக்களை விடவும் மென்மையானவை... கலகலப்ரியா போன்றோர் கொந்தளிப்பைக் கூட பொறுப்போடும், நயத்தோடும் வெளிடுபவர்கள்.. அம்பி , சைனா முதல் சைனா பஜார்காரன் வரை கிண்டல் அடித்தாலும் படிப்பவர் மனது நோகாமலேயே விஷயத்தை முடிப்பவர்... இதுவரை இவர்கள்தான் என் பிளாக் உலகமாக இருந்து வந்துள்ளனர்...

ஆனால் , திரட்டிகள் மூலமாக பெரிய பெரிய எழுத் 'தாளர்களின் ' வலைப்பூக்களையும், புரட்சிக் கருத்துகளை ஊட்டுவதாக தாங்களே தங்களை நவீன ஈ. வே .ரா க்களாக முடிசூட்டிக் கொண்டவர்களையும் அவர்களின் இடுகைகளிலும் , பிறர் கருத்திற்கு அளிக்கும் மதிப்பிலும் , மற்ற எழுத்தாளர்களை அடைமொழிக்கும் வார்த்தைகளிலும் , சுஜாதாவின் வார்த்தைகள் நியாயப்பட்டன...

தொடரும்...

பி. கு. சென்ற முறை 'தமிழும் நானும் ' பதிவு 'ரெம்ப' நீளமாக இருக்கு, கொஞ்சம் கம்மிபண்ணிக்கோங்க என்று வந்த கருத்திற்கு மதிப்பளித்து, இந்தப் பதிப்பை பகுதிகளாக இட முடிவு செய்யப்பட்டுள்ளது ...