Wednesday, May 23, 2018

இன்னொரு காஷ்மீர். இன்னொரு யாழ்.

தூத்துக்குடி ஸ்டெரிலைட் போராட்டம். இரண்டாம் நாளாக இன்றும் துப்பாக்கிச் சூடு. மேலும் ஒருவர் பலி என அறிகிறேன்.  ஏறத்தாழ 20 ஆண்டுகளாக காட்டப்பட்டு வந்த உள்ளூர் மக்களின்  எதிர்ப்புகளை மீறி, அந்த விஷ ஆலை மேலும் விரிவாக்கம் செய்யத் துணிகிறது, அரசின் சிப்காட் நிறுவனம் அந்த ஆலைக்கு நிலத் தரகு செய்யப்போகிறது.

இதை அறிந்து வருடக்கணக்கான கோபமும், ஆலை விஷத்தால் கண்ட  துயரமும், சிதறி இருந்த எதிர்ப்புகளை ஒன்றுகூட்டி  தீவிரமான போராட்டமாய் மாற்றுகிறது.  நான்கு மாதங்களுக்கு முன்.

அறவழி போராட்டம். ஒற்றைக் குமிழத்தில், தெளிவாக , அமைதியாக,  முன்னெடுக்கப் படுகிறது. ஒற்றுமை வலுக்கிறது. அரசியல் தலைவர்கள், அவர்தம் கட்சிகள் தள்ளி நிறுத்தப்படுகின்றன.

நீதிமன்றத்தின் மூலமாகவும், பின்னர் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலமாகவும் 'தற்காலிக ஆலை செயல் நிறுத்தம்' கிடைக்கிறது. அரசின்(-அரசுகளின்) விளையாட்டுகளை பற்றியும் , நீதிமன்றத்தின்  தடுமாற்றங்களையும் ,  நன்கு அறிந்த மக்கள் முழுதும் மகிழ்ச்சி அடைய வில்லை. நிரந்தரத் தீர்வுக்காக அறவழி போராட்டங்களை தொடர்கின்றனர்.

நூறு நாட்கள் சரியாக செல்கிறது போராட்டம். மாவட்டத்தின் தலைவர் -மாவட்ட ஆட்சியரை அவர் அலுவலகத்தில் சந்தித்து நிரந்தரத் தீர்வுக்கு கட்டாயப்படுத்த முடிவு செய்யப்படுகிறது. அரசு 144 தடை உத்தரவு நடைமுறைப் படுத்துகிறது.

இரண்டாயிரம் பேராக தொடங்கும் பேரணி சுற்றி இருக்கும் பத்து கிராம மக்களின் ஆதரவால் ஆறாயிரம், பத்தாயிரம், என உயர்ந்து கடைசியில் இருவதாயிரம் பேராக ஆட்சித் தலைவர் அலுவலகத்தை நெருங்குகிறது.அமைதியாக.

மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரானதும் அல்ல. மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களை எதிர்த்தும் அல்ல. தனியார்மயம், ஏகாதிபத்தியம் , முதலாளித்துவம் என்று எந்த அரசு-வியாபாரக்  கூட்டுக்கொள்கைகளை எதிர்த்தும் அல்ல.

அப்பட்டமாக விதிகளை மீறி செயல்பட்டு, பணப் பேராசையால்,எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல்,  ஊரின் குடிநீரையும், காற்றையும் , மண்ணையும் , மக்களையும் மீள முடியாத பாதிப்புகளுக்கு ஆளாக்கிய/ஆளாக்கும் வரலாறுடைய,  ஒரு தனி தனியார் நிறுவனத்தினை எதிர்த்து, அதனை மூடக்கோரி  நடக்கும் பேரணி.

நூறு நாட்களாக மிக மிக அமைதியாக , துளி வன்முறை இல்லாமல் போராடிய மக்கள்.

கொலைக்கு மிகவும் துல்லியம் தரும் போர்க்கள பாணி  உயர்முகட்டு நிலைகளில் அமர்ந்து, 'ஒரு உயிராவது போக வேண்டும்', ஒரு தியாகியையாவது இந்த மண்ணிற்கு தரவேண்டும், என்ற தீர்க்க முடிவில்  காவல்துறையும், 'தமிழகம் காஷ்மீராக மாறிவிடாமல்' தடுக்கும் நல்லெண்ணத்தில் அருந்ததி  அரசுகளும் துப்பாக்கி சூடு நடத்தி போராட்டக்காரர்களை ஒடுக்க முடிவெடுக்கின்றன. தலைகளையும் , மார்பை நோக்கியும் ஒரு இஸ்ரவேல் பாணி  தாக்குதல் நடத்திக் காட்டப்படுகிறது.

முன்பகல் 1 உயிர்.மதியம் 6 பேர் பலி. மாலைக்குள் ஒரு மளிகைக் கடைக்காரர்,   பதின்ம வயது மாணவி, போராட்டத்தில் கலந்தே கொள்ளாத  பெண் உட்பட 11 பேர் கொலை.அனைவரும் முகத்திலும், மார்பிலும் குண்டுகள்.

துடிக்கின்றனர் மக்கள். அழுகைகள். உலகில்  எங்கெங்கோ இருந்து ஓலங்கள். அதிர்ச்சி. கண் முன்னே இன்னொரு மே 18. யாராலும் நடப்பதை / நடந்ததை நம்பமுடியவில்லை. அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. கோபம் கொப்பளிக்கிறது.

அதற்குள் சில சில குரல்கள், "குடியிருப்பு பகுதிகளை தீவைத்தனர் போராட்டத்தினர்" ,"எரி குண்டுகள் வீசப்பட்டனவாம் " , "ஆட்சியர் அலுவலகம் கொளுத்தி சூறையாடப்பட்டது" , "கம்புகளையும், கற்களையும் கொண்டு 'வன்முறையின் உச்சகட்டமான' 'காவலர்களைத்   தாக்குவது' நடந்தது".

ஐயத்தின் விதைகள் தூவப்பட்டன.

"நடந்தவை கண்டிக்கப்பட வேண்டியவைதான்....ஆனால்..". என்றும்,

"போராட்டத்தைக் கடத்திய 'விளிம்பு நிலை கும்பல்களின்'  வன்முறைக்கு  பொது மக்கள் பலியாயினர், பாவம் ", என்றும்,

 "உண்மையில் நடந்தது என்ன என்று  தெரியும் வரை யாரும்  உணர்ச்சிவயப்பட வேண்டாம்" என்றும்,

சில 'நடுநிலைக்' குரல்கள் மெதுவாக எழுந்தன. மக்கள் பேரணியின் ஊடே இயந்திர மற்றும் Sniper துப்பாக்கிகளும், சிறப்பு துணை ராணுவப் படையினரும், தலைகளில் சுடும் போர்க்கள  பாணி கொலை செயல்முறைகளும் ஏன், எப்படி, எப்போது முடிவு செய்யப்பட்டன என்று அவர்கள் ஏனோ கேட்கவில்லை.

பேரணி என்பது "'பேராலயத்தில்' கூடித் தொடங்கிய பேரணி" என மாறியபோது,
விளிம்பு கும்பல் என்பது "தேச விரோத கூட்டம்" என்றான பொது,
"144 அமலில் இருக்கையில் பேரணி நடத்தினால் வேறென்ன ஆகும் " என்றபோது ,
"இந்தத் தமிழ்ப் போராளிகளில் ஒருவர் கூட சாகவில்லையே" என்றபோது ,
"பாதிரிக்கு போராட்ட களத்தில் என்ன வேலை?" என காயமுற்ற நபர்  மதச்சாயமுற்றபொது,

... உண்மை கொஞ்சம் கொஞ்சமாக விளங்கியது.

இனி இவர்க்கு யாரும் சக மனிதன் இல்லை. பாதிக்கப்பட்டவன் இல்லை. ஒடுக்கப்பட்டவன் இல்லை. உரிமைப் போராட்டம் இல்லை. உயிர் பிச்சைக் கூட இல்லை.

எனக்கு உன் இருமைப் பார்வையில்  இரு நிலைதான்.
ஒன்று - உனக்குப் பின்னால் இருப்பவன்,
அல்லது - எங்குமே இல்லாமல் இருக்க  வேண்டியவன்.

நான் உன்  நண்பன் இல்லையென்றால், உனக்கு எதிரி .
உன் எதிரி என்றால், ஒரு தனி நபருக்கு எதிராகவோ, என் வாழ்வுரிமைக்காகவோ , ஏன் என் உயிருக்காகக்  கூட போராடினாலும் , நான் தேசவிரோதி, வாழத் தகுதியற்றவன்,
(என் உயிரை நான் காப்பாற்றிக்கொள்ள நினைப்பதும் சுயநலம்தானே).

என் சிறு தவறுக்கும் , தவறென்று நீ நினைப்பதற்கும் நான் மடிய  வேண்டியவன்.

பசுவிற்கும், நாயிற்கும், மீனிற்கும் , இறக்கம் சொரியும் உன் மனம் எனக்காக இறங்காது.ஏனெனில் நான் உனக்குப் பிடிக்காத ஒரு நிலைப்பாடு  கொண்டுள்ளேன். உனக்கு ஒவ்வாத ஒரு நம்பிக்கை கொண்டுள்ளேன்.

இன்னொன்றும் புரிந்தது, "தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறிவிடாமல் தடுக்கவே நாங்கள் துப்பாக்கிசூடு நடத்தினோம்" என்னும் அக்கறையான சொற்களை கேட்ட நொடியில்... காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது.. மிக நன்றாக புரிந்தது.




No comments: