Showing posts with label விடுமுறை. Show all posts
Showing posts with label விடுமுறை. Show all posts

Saturday, December 10, 2011

பயணப் பக்கங்கள்- மதுரை



சுத்தமாக அசாருதீன் 'நிக்காவை ' மறந்துவிட்டேன்... :-) காலை 10:30 மணிக்கு நியாபக உதயம். நல்ல வேலையாக விழா மாலை 5 மணிக்கு என்பதால் உயிர் வந்தது. பலமுறை வருந்தி அழைத்திருந்தான் நண்பன்.

இதுவரை எல்லா கல்யாணங்களுக்கும் நானும் அவனும் தவறாமல் ஆஜர் ஆகிக் கொண்டிருந்தோம், நேற்று அவன் திருமணத்தில் நான்.

சற்று கவலை வந்தது...அதைப்பற்றி பிறகு நினைக்கவில்லை.

SK வந்து இருந்தார். C.T.R, SK என் வாழ்வில் நான் மிக அதிகம் மதிக்கும் இரண்டு ஆசிரியர்கள்.

கலியாணம் கழித்து அப்படியே எதிரில் ரயிலடி போய் விட்டேன். மதுரைக்கு பயணம். தாத்தாவின் எழுபத்தி ஐந்தாம் அகவை தினம். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் வாயிலிலுள்ள வீரன்தான் அவரது குல தெய்வமாம் (மதம் டு மதம் transfer ஆவது போல, குல தெய்வம் டு குல தெய்வம் transfer ஆக ஏதேனும் வழி உண்டா? எங்க அப்பா வழி குல சாமி வைதீஸ்வரராம், சொல்லி கொள்ள அவ்வளவு கம்பீரமாக இல்லை.. ).

வழக்கம் போல் டிக்கெட் சொதப்பல்.. அம்மாவிற்கும், அக்காவிற்கும் RAC , எனக்கு அது கூட இல்லை...கடி.

TTR-யிடம் அப்பா பேசியதில், "ஏறச் சொல்லுங்கள், பார்த்துக்கொள்ளலாம்" என்றார். பொதுவாக இந்த வார்த்தைகளுக்கு, கொஞ்சம் மாமூலான அர்த்தம்தான்... கிடைத்துவிடும் என்ற அர்த்தத்தை சொன்னேன்.

ஏறிவிட்டோம். எனக்கு எதிரில் வெண் சட்டை, பையில் montblanc பட்டை, சந்தனம், Gold Frame கண்ணாடி, வலது கையில் ருத்ராட்ச காப்பு, இடது கையில் தங்க கடிகாரம், pant[s], shoe[s] சகிதம் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருந்தார் ஒரு நாற்பது வயது அருகிய மதுரை தொழில்பதி.

மேற்சொன்ன எல்லாவற்றையும் விட, அவர் புத்தகம் படித்துக் கொண்டிருந்ததில் அவர் பால் ஒரு ஈர்ப்பு. "ஆ !!, 5 ரூவான்னு பேசிப் பாரு... 'ஏலு'ன்னு முடிச்சிடலாம்... ! ஆங்...!! ஆல் ரெடி ஒரு பார்ட்டி நெருக்கி வெச்சிருக்கோம்... அப்புடியே பத்துக்கு... ஆ!", என்று மந்தை சந்தையாக உயிரை எடுக்காமல் புத்தகம் படிக்கும் ரியல் எஸ்டேட் 'பார்ட்டிகள்' மீது வரும் ஈர்ப்பு.

அவருக்கும் பர்ஸ்ட் கிளாஸ் கன்பார்ம் ஆக வில்லையாம். எ/சி இரண்டாம் வகுப்பில் பயணிக்க கவலை. TTR -யிடம் 13 முறை கேட்டு விட்டார் ,"சான்சே இல்லியா ??"

இந்த இரண்டாம் வகுப்பு (எ/சி ! :-p ) கவலையிலும் புத்தகத்தை ஆர்வமாக படித்ததைப் பார்த்து, நிச்சயம் என்ன புத்தகம் என்று பார்த்து விட ஆவல். அருகில் இருந்து கண்களை ஓட விட்டேன்.

மேற்சொன்ன ஈர்ப்பு 'lost baggage-யில்' சேர்ந்து விட்டது. :-( .

நடுவில் எங்கோ ஒரு பத்தி,

'......பஸ் என்பது, பயணிகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஏற்றிச் செல்லும் இயந்திர குதிரை...அல்லது கழுதை...அல்லது ஒட்டகம்...அல்லது ஏதோ ஒன்று(!?!) அத்தகைய...'

என்று செல்லும் 'சந்தியா ', 'லதா ', 'மயங்குகிறான் ஒரு சாது ', புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பவர் மீது ஈர்ப்புகள் நிலைப்பதில்லை.

அம்மாவுக்கும், அக்காவுக்கும் எங்களோடு பயணித்த வடக்கத்திய குடும்பத்தின் புண்ணியத்தில் இரு படுக்கைகள் கிடைத்தன. எனக்கு 4 கரேஜ் தள்ளி இரவு 12-க்கு ஒரு படுக்கை கிடைத்தது. 300 'ஒவாயில்'. பெரிய மனதுடன்.

மதுரை மாநகர்.


Tuesday, April 13, 2010

ஊட்டி விடுமுறை....

தலைப்பை பார்த்த உடனே குழந்தைகளுக்கு சோறு ஊட்டி விடும் முறைகள் பற்றி கூறப் போகிறான் என்று தப்பாக புரிந்து கொள்ளாதவர்களுக்கு எனது வணக்கங்கள்..

நிறைய நாட்கள் கழித்து எனது பள்ளி நண்பர்களுடன் சுற்றுலா செல்லக் கிட்டியது. காதல் , நட்பு, பாசம் என பலவும் கண்டு, உணர்ந்து ,அனுபவித்தேன். இதில் காதல் - என் நண்பர்களின் காதல்..

கேயன், அரவிந்த் இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள்.. கேயனுடயது பத்து வருடக் காதல் என்றால் , அரவிந்தனுடயது பத்தாவது காதல் என்று சொல்லலாம்.. கணவன், மனைவி என்னும் உறவினை தாண்டி அவர்கள் தம் மனைவியருடன் நண்பர்களாக வாழ்வது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. மாஷா அல்லா . :-)

சரவணனின் காதல் ஒரு புறம். ஓயாமல் போனில் பேசிகொண்டே இருந்ததும், அவன் காதலி அழுவதும், புலம்புவதும் ,ஆராற்றுவதும், அதனை இவன் சாமாதம் செய்து கொஞ்சி ,கெஞ்சி அமைதிப் படுத்துவதும்... எங்களுக்கு சிரிப்பு..

நட்பு. திருமணம் ,வயது, வேலை, எல்லாவற்றையும் தாண்டி இன்னும் மாறாதிருக்கும் பள்ளித் தோழர்களின் நட்பு . எல்லோரிடமும் குறைகள் உண்டு.எங்களிடமும். ஆனால் அதை எல்லாம் மீறி அடிப்படையில் நல்லவர்கள் .
அரவிந்த் இன்னும் இரண்டாம் வகுப்பில் என்னைப் பார்த்து நுழைவுத் தேர்வெழுதி , என்னை விட இரண்டு ரேன்க் முன்னாள் வந்ததை வாஞ்சையோடு கூறிக்கொண்டு இருக்கிறான்..

கார்த்தி எனப்படும் கேயன்.. வாய் தவறி யாரும் அவனை ஒளி என்றோ, என்னை கேயா என்றோ அழைத்துவிட்டால் எங்களுக்குள் இன்னும் சிரிப்புதான்... பள்ளியில் எங்கள் இருவரில் யார் கேயன், யார் ஒளி என்றாய் பிரித்துக் காண முடியாத அளவுக்கு ஒட்டித் திரியும் ரெட்டையராய் இருந்தோம்..

அழாகான சிரிப்புகள்.. விளையாட்டில் போட்டி.. கோபம்.. எல்லாமே நன்றாக இருந்தது.. நவம்பர் மாதம் மாமா (தினேஷ் ) , நான் , பார்த்தது, ஆபத்தான, அமைதியான, பலருக்கும் காணக் கிடைக்காத ஊட்டி. இம்முறை வழக்கமான, ஆபத்தில்லாத விடுமுறை ஊட்டி.

கொஞ்சம் தீர்த்தம். கொஞ்சம் யாகம். புண்ணியம் சேர்த்துக்கொண்டேன் என் கணக்கில். ரயில் பயணம் - அழகு .

போதுமான முறை தோற்றால், தோல்வியையும் வெற்றியையும் ஒரே போன்று பார்க்கும் பக்குவும் ஏற்பபட்டுவிடும். எனக்கு ஏற்பட்டுவிட்டாயிற்று.

விரும்புபவர்களை நோகடிப்பதும், வெறுப்பவர்களை மன்னிப்பதும் சுலபமாக இருக்கிறது என்று முன்பே ஒரு முறை கூறி இருந்தேன்.. மீண்டும் மீண்டும் நிரூபணம்.

சுஜாதா நாடகங்கள் முழு தொகுப்பு புத்தகம் வாங்கி இருந்தேன்.. என் பிறந்தநாள் வாக்கில் கையில் நிறைய காசு புழங்கியபோது.. வெகு நாட்கள் கழித்து நான் படிக்கும் புத்தகம். குளியலறைப் புண்ணியம்.

வாங்கி படிக்காமல் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களை படித்து முடிக்க வேண்டும் என்று எண்ணம். சபதம் செய்தால் நிச்சயமாக நிறைவேற்ற மாட்டேன் என்று தெரியும். அதானால் வெறும் எண்ணம். பார்க்கலாம்.

இதற்கு மேல் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. மீண்டும் விரைவில் எழுத வேண்டுகிறேன். நன்றி. அபத்தமாக, சட்டேன்று நடுவிலேயே முடிக்கிறேன். மன்னிக்கவும்.