Tuesday, April 13, 2010

ஊட்டி விடுமுறை....

தலைப்பை பார்த்த உடனே குழந்தைகளுக்கு சோறு ஊட்டி விடும் முறைகள் பற்றி கூறப் போகிறான் என்று தப்பாக புரிந்து கொள்ளாதவர்களுக்கு எனது வணக்கங்கள்..

நிறைய நாட்கள் கழித்து எனது பள்ளி நண்பர்களுடன் சுற்றுலா செல்லக் கிட்டியது. காதல் , நட்பு, பாசம் என பலவும் கண்டு, உணர்ந்து ,அனுபவித்தேன். இதில் காதல் - என் நண்பர்களின் காதல்..

கேயன், அரவிந்த் இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள்.. கேயனுடயது பத்து வருடக் காதல் என்றால் , அரவிந்தனுடயது பத்தாவது காதல் என்று சொல்லலாம்.. கணவன், மனைவி என்னும் உறவினை தாண்டி அவர்கள் தம் மனைவியருடன் நண்பர்களாக வாழ்வது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. மாஷா அல்லா . :-)

சரவணனின் காதல் ஒரு புறம். ஓயாமல் போனில் பேசிகொண்டே இருந்ததும், அவன் காதலி அழுவதும், புலம்புவதும் ,ஆராற்றுவதும், அதனை இவன் சாமாதம் செய்து கொஞ்சி ,கெஞ்சி அமைதிப் படுத்துவதும்... எங்களுக்கு சிரிப்பு..

நட்பு. திருமணம் ,வயது, வேலை, எல்லாவற்றையும் தாண்டி இன்னும் மாறாதிருக்கும் பள்ளித் தோழர்களின் நட்பு . எல்லோரிடமும் குறைகள் உண்டு.எங்களிடமும். ஆனால் அதை எல்லாம் மீறி அடிப்படையில் நல்லவர்கள் .
அரவிந்த் இன்னும் இரண்டாம் வகுப்பில் என்னைப் பார்த்து நுழைவுத் தேர்வெழுதி , என்னை விட இரண்டு ரேன்க் முன்னாள் வந்ததை வாஞ்சையோடு கூறிக்கொண்டு இருக்கிறான்..

கார்த்தி எனப்படும் கேயன்.. வாய் தவறி யாரும் அவனை ஒளி என்றோ, என்னை கேயா என்றோ அழைத்துவிட்டால் எங்களுக்குள் இன்னும் சிரிப்புதான்... பள்ளியில் எங்கள் இருவரில் யார் கேயன், யார் ஒளி என்றாய் பிரித்துக் காண முடியாத அளவுக்கு ஒட்டித் திரியும் ரெட்டையராய் இருந்தோம்..

அழாகான சிரிப்புகள்.. விளையாட்டில் போட்டி.. கோபம்.. எல்லாமே நன்றாக இருந்தது.. நவம்பர் மாதம் மாமா (தினேஷ் ) , நான் , பார்த்தது, ஆபத்தான, அமைதியான, பலருக்கும் காணக் கிடைக்காத ஊட்டி. இம்முறை வழக்கமான, ஆபத்தில்லாத விடுமுறை ஊட்டி.

கொஞ்சம் தீர்த்தம். கொஞ்சம் யாகம். புண்ணியம் சேர்த்துக்கொண்டேன் என் கணக்கில். ரயில் பயணம் - அழகு .

போதுமான முறை தோற்றால், தோல்வியையும் வெற்றியையும் ஒரே போன்று பார்க்கும் பக்குவும் ஏற்பபட்டுவிடும். எனக்கு ஏற்பட்டுவிட்டாயிற்று.

விரும்புபவர்களை நோகடிப்பதும், வெறுப்பவர்களை மன்னிப்பதும் சுலபமாக இருக்கிறது என்று முன்பே ஒரு முறை கூறி இருந்தேன்.. மீண்டும் மீண்டும் நிரூபணம்.

சுஜாதா நாடகங்கள் முழு தொகுப்பு புத்தகம் வாங்கி இருந்தேன்.. என் பிறந்தநாள் வாக்கில் கையில் நிறைய காசு புழங்கியபோது.. வெகு நாட்கள் கழித்து நான் படிக்கும் புத்தகம். குளியலறைப் புண்ணியம்.

வாங்கி படிக்காமல் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களை படித்து முடிக்க வேண்டும் என்று எண்ணம். சபதம் செய்தால் நிச்சயமாக நிறைவேற்ற மாட்டேன் என்று தெரியும். அதானால் வெறும் எண்ணம். பார்க்கலாம்.

இதற்கு மேல் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. மீண்டும் விரைவில் எழுத வேண்டுகிறேன். நன்றி. அபத்தமாக, சட்டேன்று நடுவிலேயே முடிக்கிறேன். மன்னிக்கவும்.

Saturday, April 03, 2010

--


மு . கு. குளியலுக்கு செல்லும் முன் 'சுட்டும் விழிச்சுடர்தான் ' பாரதியார் பாடலை ஹரிஹரன்குரலில் பருகிய போதையில் , குளியலின்போது படபடவென தோன்றின கீழுள்ளவை ...

சூடு நன்றாகவே விழுந்துள்ளதாக பெருமை பட்டுக்கொள்ளும் இந்த பூனை, அதே ராகம், தாளம், குரலை கற்பனை செய்து எழுதிய வரிகள்.. எனக்கு மிகவும் பிடித்துஎழுதிய கவிதைகளுள் ஒன்று... உங்கள்கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன்...



--
ஆட்கொள்வையோ தோழி....



தொட்டு விடும் தொலைவோ என்றே நிலவு அருகுதடி- உன்
பட்டவிழ்த்த உடலோ எனவே நினைவு மருகுதடி..

உன் கன்னச் சுழல் குழியில், என் முத்தங்கள் நட்டுஅவை -உன் ,
சின்ன இதழ்பூத் - தென்னைச்சேரும் கனவு கண்டேன்...

இட்டு நிரப்பிவிட, கடல் எட்டும் பற்றாத - என்
ஆசை குமிழ் மனதுன் (ஒரு) மூச்சினில் நிறையுதடி ...

விண்ணைக் கொளுத்தும் கதிர்- கூட உன்போ லெரிக்கவில்லை
என் உள்ளம் எரித்தாடும், நிலவே - கொஞ்சமும் இறக்கமுண்டோ?

பதின் -சித்திகள் வேண்டாமடி, அடியே , முக்திகள் வேண்டாமடி...
காற்றினிலே கலந்து- உன்னைக் கண்டிருந்தால் போதும்...

ஆட்கொள்வையோ தோழி - நீ , என்திசை கண் அசைந்து - அல்ல
தாட்கொல்வையோ தோழீ - தென் திசை எனக்கிசைந்து...

தொட்டு விடும் தொலைவோ என்றே நிலவு அருகுதடி- உன்
பட்டவிழ்த்த உடலோ எனவே நினைவு மருகுதடி.... (௨)








பி.கு. பின் குறிப்பாக கொடுக்காமல், முன் குறிப்பு கொடுத்த காரணம், என்ன எதுஎன்று அறிவிப்பின்றி மேலுள்ள கவிதையை படித்துப் பார்த்தல் ஒன்றும் புரியுமா என்ற பயம் .. ஹீ ஹீ... :-) நன்றி...


Friday, February 26, 2010

Thursday, February 25, 2010

--



ஏதேதோ சொல்ல நினைத்தும் சொல்ல முடியாமலேயே மெளனமாக உறங்கிப் போன உரையாடல்கள்...

உன் அலைபேசி எண் அழுத்தி முடித்து ,பின் அழைக்காமலே துண்டித்த ஆயிரம் தருணங்கள் ...

ஆசை ஆசையாய் வாங்கி, இன்னும் என் அலமாரியிலேயே உன்னைச் சேர காத்துகொண்டிருக்கும் பீங்கான் குழந்தை...

என்றோ எதுவோ கேட்டு நீ எனக்கு முதன் முதலாய் அனுப்பிய குறுஞ்செய்தி...

தனியாய் அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம் உன் பெயரையே கிறுக்கி கிறுக்கி, தூரமிட மனமில்லாமல் பையில் சேர்ந்து கிடக்கும் காகிதங்கள்...

என்றேனும் பின்னிரவு தொலைகாட்சி திறந்தால் தவறாது எனை வாட்டும் உன் விருப்பப் பாடல்...



















குறிப்பு :
இதற்கு முடிவு தேடிக்கொண்டிருக்கிறேன்......

Monday, February 22, 2010

முயற்சி 1 :


விடு வில்லின்
பழிச் சொல்லின்
கொடி யல்லின்
பகை கள்ளின்
முகம் கண்டு
பயம் இல்லை.

மிகை செல்வம்
புகழ் கர்வம்
கெடு சொந்தம்
மகர் போகம்
தனைக் கண்டு
பயம் உண்டு .

விளக்கம்:

என் மீது எய்யப்படும் அம்புகளைக் கண்டும், என் மீது கூறப்படும் இழிவான சொற்களைக் கண்டும், கொடிய துன்பங்களைக் கண்டும், பகைவர்களின் கள்ளம் கண்டும்/ பகைக்கும் கள்வர்களைக் கண்டும் எனக்கு பயம் தோன்றுவது இல்லை.

ஆனால், அளவுக்கு அதிகமான செல்வம், பிறர் புகழ்ச்சிக்கு மயங்கி அதனால் உண்டாகும் கர்வம், நமக்கு தீமை நினைக்கும் உறவினர்/சுற்றத்தார், பல பெண்கள் மீதான தவறான மோகம், இவ்வாறான தீயவற்றைக் கண்டே பயம் கொள்கிறேன்.




முயற்சி 2:


பகைக் கொல்லின்
பழி சொல்லின்
துணை இல்லின்
தொடர் அல்லின்
துயர் இல்லை.

புகழ் நானின்
சிகை கூனின்
புறம் கா-நின்
அறம் வீணின்
உயிர் இல்லை.


விளக்கம்:

பகைவர்கள் என்னை கொன்றாலும், அவதூறு செய்து பழிகள் சொன்னாலும், என் பக்கம் துணையேதும் இல்லாமல் நான் தனி ஆனாலும், தொடர்ந்து அல்லல்கள், இன்னல்கள் தோன்றினாலும், எனக்கு அதனால் துயரம் ஏற்படுவது இல்லை.

ஆனால், என் புகழுக்கு ,நன் மதிப்புக்கு இழுக்கு சேர்ந்தால், நான் நாணத்தால் கூனி , பகைவர் முன் தலை வணங்கும் நிலை தோன்றினால், என் முதுகை நீங்கள் காண நேரிட்டால் (புறமுதுகிட்டு ஓடும் நிலை வந்தால்), என் அறத்தில் பிழை ஏற்பட்டு நான் தவறிழைக்க நேர்ந்தால், நான் அதன் பிறகு உயிர் வாழ மாட்டேன் , துயரத்தில் மரிப்பேன்.



குறிப்பு: இலக்கியம் எழுத வேண்டும் என்றில்லை.. இலக்கியத்தனமாக ஏதேனும் எழுதமுடியுமா என்ற முயற்சி...

Wednesday, February 17, 2010

--


என் வலைப்பூ பூத்து வெகுநாள் ஆகி விட்டது. சுஜாதா நினைவு நாள் (27/02) கட்டுரைகள் குமுதத்திலும், விகடனிலும், பூக்க ஆரம்பித்து விட்டன.. படிக்கையில் சிறிய சோகம்...

நேற்று சன் தொலைக்காட்சியில் 'முதல்வன்' படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.. அர்ஜுன் ஒருநாள்-பதவி ஏறி / இறங்கி அன்று இரவு அவர் வீட்டில் கரண்ட் , தண்ணீர் எல்லாம் நின்று விடும்.. அவரின் அம்மா குழாயை திருகியபடி "நம்ம வீட்ல மட்டும்தான் கரண்ட் இல்லை" என்று சொல்லிக்கொண்டே , "தண்ணியும் வரலையே ... மாமி, உங்க வீட்ல தண்ணி வருதா?" என கேட்க, அவருக்கு பின்னால் பக்கத்து வீட்டு மாமி செடிகளுக்கு தண்ணீர் சொரிந்து கொண்டே "வர்றதே! " என்னும் காட்சி 'direction' -இல் அடங்குமா , திரைக்கதையா, என்றெல்லாம் இனம்பிரிக்கும் முன்னமே, சுஜாதா தான் என் கண் முன்னே தோன்றினார்..
பாவம் ஷங்கர், கமல் மற்றும் பலர்..

கூகுல் குரோம் உபயோக ' படுத்தும்' லட்ச கணக்கான பொறுமைசாலிகளில் நானும் ஒருவன்... சத்தியமாய் குரோம் உபயோகத்தால்தான் பதிவுகள் போடுவது குறைந்துவிட்டது.... குரோமில் வலைப்பூ எழுத 'unicode ' தமிழ் வசதி தோன்றாது, ஆதலால் குரோமில் வேலை செய்கையில் பதியும் மனம் வந்தால் கூட, மீண்டும் 'firefox ' திறந்து, கடவு கொடுத்து, பதிந்து,......... அதற்குள் சொல்ல நினைத்த செய்தி/மனநிலை மறந்து/ மாறி விடும் ,

மேலும், கோப்புகளை பதிவிறக்காமல் வெறுமனே பார்த்து விட்டு அழித்து விடும் வசதியையும் நீக்கி விட்டிருக்கிறார்கள். - ஒன்று,கோப்புகளை என் கணினியில் பதிந்தாக வேண்டும், இல்லையெனின் குரோம் எப்படி காட்டுகிறதோ அப்படித்தான் பார்த்தாக வேண்டும்..

ஒரு நாளைக்கு பல முறை வலைதள-வடிவமைப்புகளை பார்த்து சரி செய்யும் பனி எனக்கு இருப்பதனால் கூகுளின் செல்லப் பிள்ளையால் ஒவ்வொரு மாலையும் என் 'desktop' (யாரேனும் தமிழாக்கம் தரவும்..) பரிதாபகரமான என் நிஜ மேசையை போலவே காட்சி அளிக்கிறது..

கூகுல் புதுமைகள் பல படைப்பதும், ' இலவசங்கள் ' பல அளிப்பதும் நம்மை கூகுல் மேல் தீராத காதல் கொள்ளச் செய்திருக்கிறது.. அதனால்தான் ஆரம்பத்தில் கூகுளின் பிரம்மாண்ட திட்டங்களையும், இலவசங்களையும் கண்டு மயங்கிய நாம், இன்றுவரை அதன் படைப்புகளின் குறைகளையும் கஷ்ட்டப்பட்டு விழுங்கியபடி சிரித்து/சகித்து கொண்டிருக்கிறோம்...

தேடலும், முகவரிப்பட்டையும் ஒன்றாய் இருப்பதை தவிர, குரோமில் வேறு எதுவும் சிறப்பாக இருப்பதாய்ப் படவில்லை.. தகவல்களை பார்ப்பது, தனிமை அமைப்புகள் சரி பார்த்தல் , இணைய உலா விபரங்கள் நீக்குதல் , உட்பட எதுவுமே எளிமையாக அளிக்கப்பட வில்லை...

இதை என் இவ்வளவு ஆராய்கிறேன் , கூகுல் மேல் ஏதேனும் கோபமா என்றெல்லாம் நினைக்கலாம், ஆனால் இதை நினைத்துப் பார்த்ததில் , நம் நாட்டின் திருமணங்கள் ஓரளவு வெற்றி பெறுவதன் ரகசியமும், அரசியல்வாதிகள் பேரளவு வெற்றி பெறுவதன் அப்பட்டமும், இன்னும் சில விஷயங்களும் இது மூலம் எனக்கு பிடிபட்டன..

௧. மனம் புதியதை விரும்புகிறது.. நாம் அனுபவித்துக்க் கொண்டிருக்கும் பொருள்/ வாழ்கை/ சேவை நன்றாகவே இருந்தாலும், புதியது ஒன்று தோன்றினால் மனம் அலைபாய்கிறது..

௨. 'இலவசம்' என்ற சொல் எல்லாரையும் மயக்கும் மந்திரம்...

௩. இவை இரண்டும் (புதுமை/இனாம் ) இருந்தால் மற்ற பிற குறைகள் எல்லாம் கண் மறைந்து விடும்...

எங்கோ தொடங்கி, எங்கோ முடிப்பதே என் போக்கு என, என் ஒன்றிரண்டு பதிவை படித்தவர்களுக்கே நன்றாக தெரிந்திருக்கும்..

சொல்லத்தோன்றும் விஷயங்கள் நிறையவும், நேரம் குறைவாகவும் இருப்பதுதான் காரணம் என்று நினைக்கிறேன்... கோர்வையாக எழுத முயன்றுகொண்டுதான் இருக்கிறேன்... பார்க்கலாம்...



குறிப்பு: தோழி இனியா சுட்டியதை மனதில் வைத்து முடிந்த அளவுக்கு தமிழ்சொற்களை பயன்படுத்த முயற்சித்திருக்கிறேன்.. அதையும் மீறி ஆங்கிலச்சொற்கள் தோன்றி இருப்பதற்கு மறுபடியும் கூகுளைத்தான் குறை கூறுவேன்.. :-)
அவர்கள் தமிழ் அகராதியில் இன்னும் சேர்க்க வேண்டும்..!

பி. கு: என் கணினியில் இருந்து குரோமை அழித்துவிட்டேன் .. :-) வாழ்க நெருப்புநரி!(firefox), வாழ்க தமிழ்!!, வாழ்க என் வலைப்பூ!!! ... ஹீஹீ...

பி.பி.கு: இனி பதிவுகள் போடாமைக்கு குரோமை குறை சொல்ல முடியாது... அதனால் வேறு காரணங்கள் தேட வேண்டிஇருப்பதால், மறு பதிவு போட சிறிது காலம் ஆகலாம்.. :-)

Thursday, January 14, 2010

சத்தியமா இது ஒரு கவிதை....

வந்துடுச்சு வந்துடுச்சு புத்தாண்டு
௨000 முடிஞ்சு - ஆச்சு பத்தாண்டு ...

வயசாச்சு வயசாச்சு ௨௬(இருவத்தாறு..)
உருப்படியா என்ன செஞ்ச திரும்பிப்பாரு...

கண்ணமூடும் நிமிஷத்துல கானாப்போகும்- நீ
முழிச்சிக்காட்டி இந்த வர்ஷமும் வீனாப்போகும்...

சாப்பாட்டுல உப்பில்லாட்டி உள்ள போகாது - அதுவே
தண்ணியில உப்பிருந்தா வேலைக்காகாது...

பல்லி உன் தலையில விழுந்தா பஞ்சாங்கம் பார்ப்பா , -ஆனா
பல்லி தலையில நீ விழுந்தா பாஞ்சாமிர்த்த(ம்) மாப்பா ...

அதனால -

இடம், பொருள், ஏவல், வவ்வால் நீ தெரிஞ்சிக்கடா,
பழையப் பஞ்சாங்க உதார் எல்லாம் நீ புரிஞ்சிக்கடா ...

எப்பிடி இருக்கு, எப்பிடி இருக்கு நா எழுதுன கவிதை?
யோசிச்சு- பதில் சொல்லு, இல்ல உழுந்திடு(ம்) ஒதை....

தடி எடுத்தவன் எல்லாருமே இப்ப தண்டால் காரன் ,
அவன் நாலு வார்த்தை எழுதுனாலே கவிதையின்றானே ?

Tuesday, December 15, 2009






? what's the point... That night when I was walking towards my car to fetch the packet of Marlboro, I couldn't stop thinking how less purposeful any life can be...


தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பறுவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வே நென்று நினைத்தாயோ!


Read it many years ago... but what am I gonna do about the வேடிக்கை மனிதன் in my mirror every morning?

Monday, December 14, 2009

என் கிராமம்..

அதிகாலை ரயிலின் அரைநிமிட
கடத்தலில், முன்பு கண்படும்
தாவணிக் குயில்கள் - இன்று
Nighty Nightingale-கள் ஆகிவிட்டன ..

கூரைச் சேவலின் கம்பீரக்
கூவல்கள் - நேற்று முளைத்த
Sattelite-குடையின் Sun Music
சப்தத்தில் அடங்கி விட்டன ..

ஆத்தா இடுகின்ற வெங்காய
வத்தல் சுமைகள் தவிர்க்க
packet chips சுவைக்கு பிஞ்சு
நாவுகள் பழகிவிட்டன..

பச்சை கதிர்கள் வளைந்து
நின்ற விளைவயல்கள்,
concrete வீடுகள் நிமிர்ந்து
நிற்கும் 'நகர்'-களாகி விட்டன..

ஆனால் மாடும், மனிதனும்
ஒன்றாய் குளித்து , ஒரு கரையில்
குடலினை கழுவி, மறு கரையில்
குடத்தினில் நிரப்பிச் செல்லும்
சமத்துவம் மட்டும் இன்னும் அப்படியே...