Monday, July 26, 2010

I love me.

A sensible guy can be sensitive too. Really. Now, is that a crime?

Well, if u r more happy with less of me, you don need to call me up and tell me that.
I like to think my friends miss me.

Well, as they say... life is like that.

:-) take care buddy.

Thursday, July 15, 2010

?

வாம்மா துரையம்மா... இது வங்கக் கரையம்மா....

சில நாட்களாக என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் பாடல்... மதராசப்பட்டினம் படம் பார்த்தேன்... நல்ல படம். சில இடங்கள் நெஞ்சை நெகிழ்விப்பதாக இருந்தன... பல இடங்களில் இயக்குனர் அந்தக் கால மக்களை சித்தரிப்பதில் உரிமை எடுத்துக் கொண்டிருந்தாலும், மனம் ஒரு நல்ல படம் பார்த்த மகிழ்ச்சியோடு திரையரங்கை விலகினேன்...

கொச்சின் ஹனிபா என்ற ஒரு நல்ல நடிகனின் கடைசிப் படம்.. இன்னும் சில காலம் இருந்திருக்கலாம்...

இந்த பதிவு அந்த படத்தை பற்றியதோ, இல்லை எனக்குப் பிடித்த கொச்சின் ஹனிபா பற்றியதோ இல்லை.. அவரைப் பற்றி வேறொரு நாள் எழுத முயல்வேன்...

இந்த பதிவு, படம் முடிந்து இதோ என் அறையில் பாடல் முணுமுணுத்த படி யோசிக்க வைத்துக்கொண்டிருக்கும் இந்த தனிமையைப் பற்றி.. நம் வாழ்வின் பதிவுகள் நாளை எப்படி எங்கே இருக்கும் என்பதைப் பற்றி...

ஐம்பது வருடங்கள் கழிந்தால் ஒளி யாருடைய நினைவில் இருப்பான், யாருடைய நினைவிலும் இருப்பானா என்பதை பற்றி...

இன்றிருக்கும் என் நண்பர்கள், அன்று எப்படி இருப்பார்கள் என்பதைப் பற்றி... வாழ்க்கை இன்னும் என்னென்ன ஆச்சர்யங்களை, ஏமாற்றங்களை, அதிர்ச்சிகளை ஒளித்து வைத்துள்ளது என்பதைப் பற்றி..

எல்லோருமே பிறந்து விட்டோம்... மூச்சு, இதயம் அனிச்சையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன... பசி, தூக்கம், காமம், எந்த வித அழைப்புமின்றி அறிவிப்புமின்றி தோன்றி- அது தீர்ந்து - மறைந்து கொண்டிருக்கின்றன... அவைகளின் பக்க விளைவுகளை சமாளித்துக் கொண்டு நடமாடி...

ஒருநாள் இவை அனைத்தும் நின்றுவிடும். அவற்றின் நிழல்கள் நீடிக்கும்.. காமத்தின் நிழல் பிள்ளைகளாய். பசியின் நிழல் விட்டுச்சென்ற தொழிலாய் . அயர்வின் நிழல் செர்த்துச்சென்ற சுகமாய்.

ஆனால் நாம் ? உங்கள் தாத்தாவின் பெயர் தெரியுமா? அவர் தொழில்? அவரது தந்தையின் பெயர்? தொழில்? அவரது பூர்விகம்? தெவை இல்லை, இல்லையா? அல்லது அவசியம் இல்லை.

அவர் சமாதி மண்ணோடு மக்கி விட்டது. அவர் நினைவு மங்கி விட்டது. அவரது கடைசி நிழல்படமும் கரையான் இரைப்பையில். இனி அவர் இல்லை. உங்கள் மகனுக்கு அவர் இல்லை. உங்கள் பேரனுக்கு உங்கள் தகப்பன் இல்லை.

அவர்கள் வாழ்வின் நீளம் 3 தலைமுறை. நீங்களும் மறக்கப் படுவீர்கள். உங்கள் பதிவுகள் திறக்கப் படாமல் போகும். நம் பெயர்கள் உச்ச்சரிக்கபடுவது ஒரு நாள் முற்றும் முற்றும். உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகள் உங்களின் சுவடரியாமல் போவார்கள்.

ஏன்? பசி. தூக்கம். காமம். இவற்றின் எச்சங்களை மட்டும் விட்டுச் சென்றால், நம் வாழ்வின் நீளமும் இதுதான். குறைய வாய்ப்புண்டு. நிச்சயமாய்.

அறிவு, உணர்வு, பரிவு. இவற்றை விதைத்து பாருங்கள். நீளும். வாழ்ந்தோம், மறைந்தோம், கரைந்தோம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. மூழ்கி மூச்சு முட்டி , இறக்கப்போகிறோம், மறக்கப் போகிறார்கள் என்று அறிந்து மரணம் சேர்வதில் உடன்பாடில்லை.

நான் நினைக்கப் பட வேண்டியவன். அதை நோக்கி நடக்கப் பழக வேண்டியவன்.

Saturday, July 03, 2010

உலகம்.

--



இரவுகள் நீண்டு , விடியல்கள் தீர்ந்து , நீரெலாம் உறைந்து,
உயிரெல்லாம் ஓய்ந்து, கடவுள்கள் சாய்ந்துபோன உலகம் .

கோடியாண்டுகளில் யாருமே கேட்டிராத அமைதி.
கரிய வானம். ஜொலிக்கும் நட்சத்திரங்கள் .

இவற்றை வர்ணிக்கக் கூட எவரும் இல்லை.

கரப்பான் பூச்சிகள்கூட தீர்ந்து விட்டன.

அகழ்வுகள் கூறும் கதை கேட்கவும் யாருமில்லை.

ஆயிரம் ஆயிரம் வருடங்களாய் ,
உலகில் மானுடம் பார்த்த, கேட்ட, உணர்ந்த ஒட்டு மொத்த அறிவும் கோடிக்கணக்கான நூல்களாய், தகடுகளாய், பேழைகளாய் படிக்க எவருமற்று கிடக்கின்றன.

இனியும் என்றும் எவரும் பயனுற போவதில்லை.

பணம் , வைரம், தங்கம், காணி, கடவுள், இன்னும் மனிதன்
துரத்தியவை, துடித்தவை, படைத்தவை எல்லாம் அர்த்தமற்றவையாய் கிடக்கின்றன .

காற்று, இல்லை. அசைவு, இல்லை. காலம், இல்லை. மாற்றம், இல்லை.

விழிப்பில் அம்மாவைக் தேடி ஓடினேன்.

Monday, June 14, 2010

குட்டிக் கவிதைகள்

என் முத்தம் மட்டும்
முடிகையில்தான்
இதழ்கள் இணைகின்றன...

--

வானம், கையெட்டும் தூரம்தான்.
என் ஜன்னல்
கம்பிகள்தான் தடுக்கின்றன..

--

ஓடி விளையாடு பாப்பா-
என்று மாலை முழுதும்
மனப்பாடம் செய்தான்.

--

புத்தத்தில் கூட
ஆசைக்கு இடம் உண்டு.
ஆசைகள் துறக்க.

--

பி. கு. வழக்கம் போல் எப்பொழுதோ எங்கெங்கோ தோன்ற தோன்ற கிறுக்கிவைத்திருந்த கவிதைகள். என் பொன் குஞ்சுகள்.

Sunday, June 13, 2010

அகம் பிரம்மம்.
சர்வம் சிவம்.
சுகம் மாயம்.
ஜீவிதம் கர்மம்.

Tuesday, June 01, 2010

தமிழ் வலை..

வலைக் குறிப்பு, வலையோலை, வலைப்பதிவு, வலைப்பூ என்று ஆதி சிவன்போல் ஆயிரம் நாமத்தால் அழைக்கபடுகின்ற பிளாக்கினைப் பற்றி எழுத வேண்டும் என்று கடந்த சில வாரங்களாக நான் கொண்ட அனுபவங்கள் தூண்டுகின்றன...

வலை நண்பர் கவிதா அவர்கள் அன்புத்தொல்லை தந்து தமிழ் மனம் போன்ற வலை பின்னல்களிலும் எனை இணையசெய்தார்... அங்க இருந்து தாங்க 'வலைப்பூவின் முட்பக்கம்! ' என்று எழுதும் அளவிற்கு தகவல்கள் .

சுஜாதா கேள்வி - பதில்களில் ஒருவர்

"பிளாக்குகள் பற்றி உங்கள் எண்ணம் என்ன ?" என்று கேட்க ,

" 'சாட்'களை விடவும் பொறுப்பில்லாதவை பிளாக்குகள்..."

என்பது போன்று ஒரு பதில் அளித்திருந்தார் சுஜாதா ... அதைப் படித்த பொது, சுஜாதாவிற்கும் வயசாயிடுச்சா? என்ற அளவிற்கு நான் யோசித்தேன்... ஏதாவது ஒன்றிரண்டு வலைப் பதிவுகளை படித்துவிட்டு சொல்லிருக்கார் என்று ஒரு நிமிடம் அவரை தவறாகவும் நினைத்துவிட்டேன்...

தமிழ் மனம் மற்றும் சில திரட்டிகளில் இனைந்து பிற தமிழ் 'அறிஞர்', 'எழுத்தாளர்கள்', 'மேதைகளின்' , வலைப் பூக்களை பார்த்த பின்புதான் ஒன்றிரண்டைப் பார்த்துவிட்டு ஊகித்தது சுஜாதா இல்லை என்பது உரைத்தது...

எனக்குத் தெரிந்த இனியா, யாத்ரா , போன்றோரின் வலைப்பூக்கள் நிஜப்பூக்களை விடவும் மென்மையானவை... கலகலப்ரியா போன்றோர் கொந்தளிப்பைக் கூட பொறுப்போடும், நயத்தோடும் வெளிடுபவர்கள்.. அம்பி , சைனா முதல் சைனா பஜார்காரன் வரை கிண்டல் அடித்தாலும் படிப்பவர் மனது நோகாமலேயே விஷயத்தை முடிப்பவர்... இதுவரை இவர்கள்தான் என் பிளாக் உலகமாக இருந்து வந்துள்ளனர்...

ஆனால் , திரட்டிகள் மூலமாக பெரிய பெரிய எழுத் 'தாளர்களின் ' வலைப்பூக்களையும், புரட்சிக் கருத்துகளை ஊட்டுவதாக தாங்களே தங்களை நவீன ஈ. வே .ரா க்களாக முடிசூட்டிக் கொண்டவர்களையும் அவர்களின் இடுகைகளிலும் , பிறர் கருத்திற்கு அளிக்கும் மதிப்பிலும் , மற்ற எழுத்தாளர்களை அடைமொழிக்கும் வார்த்தைகளிலும் , சுஜாதாவின் வார்த்தைகள் நியாயப்பட்டன...

தொடரும்...

பி. கு. சென்ற முறை 'தமிழும் நானும் ' பதிவு 'ரெம்ப' நீளமாக இருக்கு, கொஞ்சம் கம்மிபண்ணிக்கோங்க என்று வந்த கருத்திற்கு மதிப்பளித்து, இந்தப் பதிப்பை பகுதிகளாக இட முடிவு செய்யப்பட்டுள்ளது ...

Saturday, May 29, 2010

பொல்லாது...

--


அலைகள் போல நில்லாது
அலையும் உள்ளம் பொல்லாது...

விழியை தீண்டி நில்லாது
விலகும் துயிலும் பொல்லாது...

சொல்லச் சொல்லி சொல்லாது
ஏய்க்கும் வார்த்தை பொல்லாது...

உனைக் காணும் நொடியில் நில்லாது
தொடரும் காலம் பொல்லாது ...

உனைக் காணாக் கணத்தில் நில்லாது
ஓடும் உயிரும் பொல்லாது...

நீ இல்லா உலகம் இல்லாது
செய்த இக்காதல் பொல்லாது...





பி. கு. ஒரு பின்னிரவில், கடற்கரையில் அழுது , சிரித்து, ஐஸ் கிரீம் முதல்சிகரட் வரை பகிர்ந்து காலத்தை அந்த நொடிக்குள் தொலைத்து இருந்த காதலர்களையும், ஓயாமல் எனை அழைத்து செய்தி சொல்லிகொண்டிருந்த கடல்அலைகளையும் விட்டுப் பிரிந்து கிளம்புகையில் தோன்றிய சில வரிகள்...

Sunday, May 16, 2010

தமிழும் நானும் ...

யோசிச்சு யோசிச்சு பாக்குறேன்.. எப்புடி? கணக்குல 10 , சயின்ஸ்ல 20, வரலாறு, பூகோளம் எல்லாம் அரையோ, காலோ... ஆனா தமிழுல 80 -90.... எப்புடி? எங்க நெஜமாவே தமிழ் பிடிக்க ஆரம்பிச்சிது?

ராதா சித்தி .. சிறுவர் மலர்... அங்கதான் ஆரம்பிச்சிருக்கணும்... ஆமா.. அங்க தான் ஆரம்பிச்சிச்சு... கதை படிச்சு படிச்சுதான் எனக்கும் அமுதனுக்கும் சாப்பாடு ஊட்டனும்.. ராமாயணம், மகாபாரதம், புராணம், சி. ஐ . டீ.... இப்படி விதம் விதமா சொல்லணும்...

ஆனா நல்லா நியாபகம் இருக்கு, ராதா சித்திக்கு சில நேரம் கதை சொல்லிச் சொல்லி தொண்டை வறண்டிரும்... அப்பறமா சொல்லறேன் குட்டி, அத்தைக்கு முடியலை.... நீங்களே படிங்க பாப்போம்ன்னு தூங்கிடுவாங்க... அப்போ நாங்களாவே சிறுவர் மலர் எடுத்து படக்கதை பார்க்க ஆரம்பிச்சிடுவோம்... அப்பறம் மெல்ல மெல்ல சிறுகதை... தொடர்கதை....

அப்பறம்.. மன்னார்குடி.. அங்க போனா அம்மா, மாமா சின்ன வயசுல அவங்க படிச்ச படக்கதைகள்.. 'ராணிமுத்து ' ;-D ... மாயாவி, இரும்புக்கை மாயாவி, இன்னும் நெறைய...

ஜூனியர் விகடன்ல வார வாரம் எதாவது ஒரு பெண் 'போலிஸ் ஸ்டேஷன்ல கற்பழிக்கப்ப் பட்ட', அல்லது யாராச்சும் ஒரு நடிகை, அல்லது , 'அழகியோட ' அரைகுறை டிரெஸ் படம் , இதுமாதிரிதான் அட்டையில போடுவாங்க... விலாவாரியா கிளுகிளுப்பு கொறையாம எழுதவும் செஞ்சிருப்பாங்க....

அதானால அதையும் படிக்க ஆரம்பிச்சேன்... திருட்டுத்தனமா...

"போற வழி தப்பா இருந்தாலும், சேருற எடம் கோவிலா இருக்கணும் " நு ஜென்டில்மேன் படத்துல நம்பியார் சொல்ற மாதிரி, இப்படி உருப்புடாம படிச்சிருந்தாலும், அதுல தமிழ் நல்லா வந்திருச்சி...

(ஆனா இப்புடி கண்ட கண்டதை படிச்சதுனாலதான் மத்த எதுலயும் தேறலைன்னு நீங்க நேனைக்கறதும் கேக்குது, அதுக்கு அப்பறம் வருவோம்...)

அப்பறம் நான் படிக்க ஆரம்பிச்சது வைரமுத்து .... மனுஷன் அப்போலாம் என்னைய அடிச்சு தொவைச்சு அழ வெப்பாரு... இந்த டயத்துல தான் நான் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் எழுதவும் ஆரம்பிச்சேன்...

இதுக்கெல்லாம் மின்னாடியே, அதாவது ரெண்டாம் வகுப்பு, மூணாம் வகுப்பில இருந்தே , தமிழ் மேல இன்னும் ஆசை வர காரணமா அமைஞ்சது - 'தமிழ் டிராமா...'

நாம என்னமோ வேல்கொம்பு புடிச்சிகிட்டு நாடகம்பூராம் ஓரமாதான் நிக்கப்போரோம்னாலும்... ஒருவரி கூட நம்பளை நம்பி குடுத்ததே இல்லனாலும்,
எல்லார் வசனத்தையும் மனப்பாடம் பண்ணி வீட்ல வந்து அம்மா முன்னாடி 15 பேரை மோனோ ஆக்டிங் செஞ்சு காட்டி அழ வெப்போம்......

பின்னாடி கொஞ்சம் முன்னேற்றம்.. நாலு காவல்காரன்ல முன்னால நாமதான்.. "ஒளி, நீ முன்னாடி நில்லு"ம்பாங்க தமிழ் அம்மா... மூஞ்சி தெரியும் போட்டோ எடுத்தா ... ஒரே பெருமை...

ஒரே ஒருதடவை தப்பி தவறி நாலு வரி வசனம் வந்துடிச்சு... ஆசை ஆசையா அம்மா கிட்ட வந்து சொல்லிட்டேன்..

கதையில பொய் சாட்சி சொல்றவன்... உடனே எங்க ஆத்தா , அப்பா எல்லாரும் பொங்கிட்டாங்க.... "பொய் சாட்சி சொல்றமாதிரி, பொய் சொல்ற மாதிரி எல்லாம் நடிக்க கூட கூடாது..." ஆச்சா ஊச்சான்னு ஒரே அட்வைசு.... கடைசில நடிக்க விட்டாங்க....

வெவரம் தெரிஞ்ச அப்பறம் நெறைய தடவ நெறைய கேள்விகள் மனசுக்குள்ள வந்திருக்கு..அவங்க கிட்ட எல்லாம் கேக்கனும்னு .... சரி ...அதை விடுங்க...

இங்கிலீஷ் நாடகம், டான்சு, எதுக்கு யார் கூப்ட்டாலும் போறது இல்ல... 'நாங்க தமிழ் டிராமா..'

அப்பறமா கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து ஹீரோ ஆனோம்... ஆனா பாருங்க என் கெரகம்... அடுத்த நாடகத்துல இருந்தே நடிக்க விடல வீட்ல... ("மொதல்ல படிச்சி கிழி, அப்பறம் போய் கூத்தாடு")

அப்பறம் பத்தாம் வகுப்பு லீவுல அம்மா அறிமுகம் செஞ்சு வேச்சவருதான் என்னை அடுத்த படிக்கு அழைச்சிட்டு போனாரு... அவர் பேர் சுஜாதா... கணேஷு, வசந்துன்னு ரெண்டு பேரை என் வாழ்க்கையில கொண்டு வந்தாரு.....

"பாஸ், குட்டிங்க எல்லாம் நம்ம கூடத்தான் ஜெர்மனி வருதுங்க... "
"என்னடா பாஷை இது, குட்டிங்க அது இதுன்னு..."
"அப்பறம் எப்புடி பாஸ் சொல்றது? 'கன்னிகைகள்'-ன்னு சொல்லலாமா? , ஆனா அது நமக்கு சரியா தெரியாதே பாஸ்....? கேட்டு வரட்டுமா ?"

வயிறு புன்னாயிருச்சிபா இந்த வசந்த் பையனோட... லீவு பூரா அவங்களோடதான்...

அப்பறம் புடிச்சது, கெடைச்சது, கெடைக்காதது, கற்றது, பெற்றது, கவிதை, பிளாக்குன்னு... தமிழ் என்னோட வந்துகிட்டு இருக்கு... ஆனாலும் இன்னும் சந்திப் பிழை இல்லாம எழுத தெரியாது... இலக்கணத்துல 80 பர்சண்டேஜ் மறந்திட்டேன்...

"சலசல சலசல ,ரெட்டைப் பிறவி, தகதக தகதக ரெட்டைக் கிளவி, உண்டல்லோ...தமிழில் உண்டல்லோன்னு " ஜீன்ஸ் பட பாட்டை வெச்சி திலகவதி மிஸ் ரெட்டைகிளவி எடுத்தது,

"ராமாயணத்தில் அங்கதன் ராவணனிடம் தூது போய், மலைமாதிரி இருந்த தோள்கள் குலுங்க, தன கரங்கள் இரண்டும் செவந்து போற அளவுக்கு கைய தட்டி 'நக்கினான்' அப்படிங்கறதை படிச்ச மறு நிமிஷமே, 'நக்கல்'ங்குற வார்த்தை எங்க இருந்து வந்துச்சுன்னு புரிஞ்சது நியாபகம் இருக்கு ....

நெல்லுக்கும் யானைக்கும் சேத்து பாடுன சிலேடையோட நியாபகம் இருக்கு...

"எக்கலிங்கம் போனால் என்ன, ...மதுரை சொக்கலிங்கம் உண்டே துணைன்னு" குருட்டுப் புலவர், இருந்த ஒரு டிரெஸ்ஸயும் தொலச்சப்பக் கூட நக்கலா பாடுன பாட்டு நியாபகம் இருக்கு...

இப்படி கொஞ்சம் கொஞ்சம் நியாபகம் இருக்கு.... புறநானூறு அறிமுகம்- சுஜாதா, வாங்கி இருக்கேன்.. பாக்கலாம்....

தமிழ் ரொம்ப பிடிக்குமுங்க.. ஆனா சூரப் புலி எல்லாம் கெடையாது... எனக்கு வெக்கமாத்தான் இருக்கு... என்ன பண்றது? தமிழ் பிடிக்குமே...

தப்பு பண்ணாம தமிழ் கத்துக்க முடியாதுங்க... அதனால வெக்கப்படாம கத்துக்கலாம்.... கேக்க மறந்துட்டேன்....உங்களுக்கு தமிழ் பிடிக்குமா? வாங்களேன், தப்பு தப்பா பேசி எழுதியாச்சும் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கலாம்... தப்பில்ல .... :-)

Monday, April 26, 2010

Pretty Woman....

Pretty Woman... please love me,
Pretty Woman... it's destiny,
Pretty Woman... just u n me,
Pretty Woman... we've a history,

Pretty Woman.....

Pretty Woman... it's just crazy,
Pretty Woman... it's not easy,
Pretty Woman... dun make me cry,
Pretty Woman... dun let me die,

Pretty Woman...

Pretty Woman... where is you,
Pretty Woman... I miss you,
Pretty Woman... hear my song,
Pretty Woman... don't be long,

Pretty Woman...
Lovely,
Pretty Woman..
Pretty,
Pretty Woman..

ma loving,
Pretty Woman..

am lonely,
Pretty Woman.......


Thursday, April 22, 2010

முதல் பரிசுக் கவிதை...

அதிகாலை எழுந்து விட்டதால் என்ன செய்வது என்று அறியாமல், தூங்கவும் மனம் இல்லாமல் என் பழைய கவிதை நோட்டுகள் / துண்டுக் காகிதங்கள் ஆகியவற்றை பிரித்து மீண்டும் பலவருடங்களுக்கு முன்னாள் கவிதை எழுதும் ஆர்வக்கோளாரில் கொண்டு கண்டதையெல்லாம் எழுதிச் சேர்த்து வைத்திருந்த கிறுக்கல்களை ஆராய்ந்தேன்... இப்படி அடிக்கடி செய்வது ஒரு அழகான உணர்வு ...

அதில் சில கவிதைகளை வலைப்பூவில் இடவேண்டும் என்று தோன்றிற்று .. சில அவைகளின் நயத்திற்காக, பல நகைப்புகாக.. நிறைய கவிதைகள் சில்லியாக இருக்கின்றன.. அவற்றின் கதைகளைக் கூறி, அவற்றைப் பற்றி இப்பொழுது தோன்றும் கருத்துக்களை இட்டு வலைப்பூவில் போட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது..

ஒருவேளை, வலைப்பூ என்பதே எல்லா இடத்திலும் கவிதைகள் பிரசுரம் ஆகாமல் திருப்பி அனுப்பப்பட்ட ஒரு கவிஞனின் கண்டுபிடிப்பாக இருக்குமோ என்று தோன்றுகிறது? நம் படைப்புகளை எவனும் வெளியிட வேண்டாம்.. நாமே வெளியிட்டுக்கொள்ளலாம்.. நிராகரிப்பே கிடையாது... யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

நான் முதல் முதலாக (முதலும் கடைசியுமாக) பரிசு பெற்றது இந்தக் கவிதைக்குதான்.. பதினொன்றாம் வகுப்பில், பள்ளி ஆண்டு விழா கவிதைப் போட்டிக்காக எழுதிய கவிதை இது.. மூன்று தலைப்புகள் கொடுத்திருந்தார்கள்.. ஒன்று அப்பொழுது குஜராத்தில் நிகழ்ந்திருந்த கொடிய இயற்கை பேரழிவு - பூகம்பம் பற்றியது, மற்றொன்று அமரகவி பாரதி பற்றி, மூன்றாம் தலைப்பு நினைவில் இல்லை.

பாரதியை பற்றி எழுதுவதுதான் என் முதல் எண்ணம்.. பிறகு எவ்வளவு எழுதினாலும் ஏற்கனவே எங்கோ யாரோ எழுதியது போலவே எனக்கு ஓர் உணர்வு.. மிகவும் கிளிஷே வாகவே கருத்துக்கள் தோன்றிக்கொண்டிருந்தன... மீசைவைத்தவன், முண்டாசுக் கவிஞன்.. என்றெல்லாம்... பிறகு இந்த தலைப்பை தேர்ந்து எடுத்தேன்...

கடுமையான போட்டி என்று கூற இயலாது. அனால், ஆண்டுவிழாவிற்கு தமிழ் வாத்தியாரும், சமஸ்க்ரித வாத்தியாரும் சமர்பித்த நாடகங்கள் நிராகரிக்கப்பட்டு, நான் எழுதிய நாடகம் தேர்வு செய்யப்பட்ட நேரம் அது. இருவரும் என் மீது கொஞ்சம் அதிகமாகவே துவேஷத்தில் இருந்தனர்.

தமிழாசிரியர் உயர்திரு . புகழேந்தி எனப்படுகின்ற சீனிவாசன் எனப்படுகின்ற திரு . அஸ்வின் அப்பா என்னை தேர்ந்தெடுக்கக்கூடாது என்று கொஞ்சம் ரொம்பவே கடுப்பில் இருந்தார்; வெங்கடகிருஷ்ணனுக்கு பரிசு வாங்கித்தர வேண்டும், என்பதில் சமஸ்க்ரித ஆசான் மிகக் குறியாகி, அவரே கவிதை வரிகளையும் எழுதி தந்திருந்தார். நல்லவேளை!

அதிர்ஷ்டவசமாக இவர்கள் இருவருமே தேர்வு செய்யும் நடுவர்களாக இல்லை, திருமதி . கர்னாம்பாள் என்றழைக்கப்பட்ட, கிருபாகாந்த் அம்மாவாகிய, எங்கள் வேதியல் ஆசிரியை வெற்றிக் கவிதையை தேர்வு செய்தார்.மறக்காமல், கவிதையின் கடைசி வரிக்காகத்தான் இந்த பரிசு என்பதையும், இந்த ஆர்வத்தை படிப்பிலும் காட்டினால் உருப்படுவேன் என்பதையும் கூறி வாழ்த்தினார்.

இன்னொரு அழகான கொயின்சிடன்ஸ் , ஆண்டுவிழா நாடகத்தில் பாரதி வேடம் ஏற்றதால், கவிதைப் போட்டியில் பரிசு பெற என் பெயரை அழைத்ததும் மேடைக்கு பாரதி வேடத்திலேயே சென்றதைக் கண்டு கூட்டம் சிரிப்பும் ஆரவாரமும் கொண்டது... என் முதல் பரிசுக் கவிதை, முதல் பரிசையே பெற்றது....

இப்பொழுது படித்து பார்க்கையில் எனக்கே ரொம்ப 'காமெடி ' யாக இருக்கிறது.. கிட்டத்திட்ட சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதை... இன்று இதைப் படிக்கையில் சிரிப்புக் கவிதையாக இருக்கிறது... எனிவே... படியுங்கோள் ...


இதயத்தில் பூகம்பம்...
(தலைப்பு?...ஹ்ம்ம்.. )

பூமித்தாயே !,

உன் வாளின் கூர்மை சோதிக்க,
பூக்கள்தானா கிடைத்தன?
(ரொம்ப வைரமுத்து படித்து, கேட்டு உணர்ச்சிவசப்பட்டிருந்த காலம் அது... :-) )

உன் கனலின் வெப்பம் சோதிக்க,
பனித்துளிகள்தானா கிடைத்தன?

உன் பிள்ளைகள் மீது உனக்கே
ஏன் இந்த கோபம் ?

இரு,... இரு,...

(இது எதுக்குன்னு எனக்கும் தெரியலை..)

உன் கோபத்தின் எழுச்சியால்
ஏற்பட்ட பிளவா இது?

இல்லை, நீ குலுங்கி அழுததனால்
ஏற்பட்ட பிளவிதுவோ?
(ஐயோ... முடியலை...கவிஞர் பொங்குராராம்.)

நீ தலை தட்டி கண்டிக்க
ஆயிரம் வழிகள் இருக்கிறதே;

நீ வருத்தத்தை வெளிப்படுத்த
ஆயிரம் முறைகள் இருக்கிறதே;
(அண்ணாமலை படத்து டயலாக் தானே இது?)

அதையெல்லாம் விடுத்து
ஏன் இந்த அழிவு வழி?

உன் வருத்தத்தை வெளிப்படுத்த,
அளித்தாயோ பிரிவு வலி?

(வழி, வலி ...அடடடடா....)

போதும் தாயே !,
நிறுத்திவிடு உன் தாண்டவத்தை இனியாவது!,
உன் கோபம் எனும் முகமூடி வினையானது..

எச்சரிக்கிறேன் நிறுத்திவிடு பூமிப்பாவை,
இல்லை என் கவிதைத் தீயில் எரிந்தே போவாய்... !
(ஹ்ம்ம்.. பூமியை எரிச்சிட்டு தலைவர் வேற எங்க போவாராம்?)






பி. கு. அஸ்வின் அப்பா, கிருபாகாந்த் அம்மா, என்றெல்லாம் ஆசிரியர்களுக்குபட்டப் பெயர் வைத்திருப்பதற்கு மிக மிக சுவாரஸ்யமான காரணங்கள்இருக்கின்றன... அவை பற்றி வேறோருசமயம் வாய்ப்பு அமைகையில் கூறுகிறேன்..